திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
சிவபுராணம்
தென்னாடுடைய சிவனே போற்றி. அதாவது,தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி. அதாவது,தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி. அதாவது,தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம்.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ' அதாவது, எந்தநாட்டிலும் உள்ளோரும் உன்னை (இறைவனாக)இறையாகக் கண்டு போற்றுகிறார்கள்.
* * * * *
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக இருந்து வரும் பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற அறியாமையாகிய இடரை அகற்றி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே - பிறந்து இறக்கும் காலவெளிகளில்
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
பிணைக்காமல் காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற என் தலைவனான மாணிக்க வாசகரின்
திருவாசகம் என்னும் தேன்…. திருவாசகம் என்னும் தேன்
திருவாசகம் எனும் தேன்... திருவாசகம் எனும் தேன்
* * * * *
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
ஒருவனாகியும் பலவுருக் கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
தேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங் கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்
கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்ததெய்தி
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக் கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல் பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய், விளங்குஒளியாய்,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருங்சீர்
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே!
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன், எம்பெருமான்
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்து விட்டேன், எம்பெருமானே!
மெய்யேஉன் பொன்அடிகள் கண்டுஇன்று வீடுற்றேன்
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
உண்மைப்பொருளே ! காளையை ஓட்டி வருபவனே! வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே
“ஐயா!” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச் சிறிய பொருளுமாக இருப்பவனே!
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே. என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே!
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே!
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய், அனைத்துஉலகும்
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய், (இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய், உயிர்களை மாயைக்குள்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
போக்குவாய்! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியான
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷுமமான) பொருளே ! வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு
சிறந்தஅடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான்
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
நிறங்கள்ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திருந்தாய், எம்பெருமானே! கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைந்திருந்தாய், எம்பெருமானே! கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைந்திட மூடிய மாய இருளை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
அறம்பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டிப்
செய்யத் தகுந்தது, செய்யத்தகாதது என்னும் விதிகளால் கட்டி,
புறம்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி,
மேலே ஒரு தோலும் சுற்றி,
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
கெட்டுப் போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து, மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கி நிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்உருகும்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய எனக்கும் அருள் செய்து,
நிலந்தன்மேல் வந்தஅருளி நீள்கழல்கள் காட்டி,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து, உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப்பொருளே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே!
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
ஒளியுருவினனே! தேன் நிறைந்த அமுதமே! சிவபுரத்தை உடையவனே!
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே!
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே!
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
தெவிட்டாத அமுதமே! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே!
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே! உள் நிற்பவனே!
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
அன்பினால் தன்னைத்தொழும் அடியார்களுக்கு அன்பே உருவானவனே! எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே!
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே
சுடருருக் கொண்டவனே! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே! பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே!
ஆதியனே அந்தம் நடுஆகி அல்லானே
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும் ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே!
ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக – அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தங்கருத்தில்
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய
நோக்குஅரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே
சிந்தையின் பார்வை வியத்தற்கு உரிய பார்வை! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே!
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே!
காக்கும்எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே!
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே! தந்தையே!
தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய்
மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து,
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
தேற்றமே! அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே! என்னுடைய சிந்தனையினுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுதஊற்றே! என்னை உடைமையாக ஆள்பவனே!
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
ஆற்றேன் எம்ஐயா அரனஓ என்றுஎன்று
இயலவில்லை, எம்தலைவா! அரனே! ஓ! என்று பலவாறு
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லானே
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே!
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே!
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே! தென்பாண்டி நாட்டை உடையவனே!
அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று
அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே! ஓ! என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்அடிக்கீழ்ப்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்
* * * * *
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Thiruvasagam (1 - 51 Pathigam)
சிவ கயிலை திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் ஐயா, D.V ரமணி ஐயா மற்றும் பைரவர் சுவாமிகள் ஆகியோர் பாடிய திருவாசக பாடல்களின் YouTube லிங்க் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி. ஓம் நமசிவாய
Click here for Videos


.png)
.png)

























































